இறந்த நாள்
செப்டம்பர் 18, 2011 1 மறுமொழி
இன்று எனது இறந்த நாள்
ஆம்.
45 அகவையில் இறந்து
46வது அகவையில் பிறந்தேன்.
ஒவ்வொரு கணமும்
இறந்த பின்னரே
அடுத்த கணம்
பிறக்கின்றது அல்லவா?
பெஸிமிஸ்ட் என்பவர்களே
நான் பெஸிமிஸ்ட் இல்லை
இந்த கணத்தில்
வாழ்கிறவன்
ஒவ்வொரு கணத்திலும்
புதுப்பித்துக் கொள்ளும்
நானா பெஸிமிஸ்ட்?
அடுத்த கணம்
இறப்பது திண்ணம்
என்றால் வருத்தம்
எதற்கு?
அதற்கடுத்த கணத்தில்
பிறப்பதும் திண்ணமே
எனும் எண்ணமே
இறப்பை விரும்புகிறது.
என்னை வாழ்த்தாதீர்கள்.
வசையொழிய வாழ்பவனல்ல நான்
வசையே எனக்கு ஊக்கத்தை தருகிறது.
வசையே எனது இசை.
சாவே உனக்கொரு நாள்
சாவு வந்து சேராதோ என்றான் கண்ணதாசன்.
காலனே அருகில் வாடா
காலால் மிதிக்கிறேன் என்றான் முண்டாசு கவிஞன் பாரதி.
நெருநல் உளனைப் பற்றி எழுதினான் வள்ளுவன்.
இன்று இக்கணத்தில்
இக்கணத்தை முழுமையாக
அனுபவித்து வாழும்
என்னைப் பாட வந்தது இயற்கை.
ஒவ்வொரு கணமும்
மாறிக் கொண்டிருப்பதுதான் இயற்கை.
நீ பார்க்க வேண்டும் என்று நினைத்து
பின்னர் பார்ப்பதற்குள்
இலையின் நிறமே மாறி விடுகிறது.
அந்த மாற்றத்தை அறிந்து விட்டால்
ஒவ்வொரு கணமும்
நான் இறப்பதில் மகிழ்ச்சியே எனக்கு.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பரே!