சமண நூலாகிய மணிமேகலையில் மணிமேகலை சமயவாதிகளுடன் உரையாடியதில் சமணர்கள் மட்டுமல்ல, அறு சமயத்தினரின் அன்றைய கணிதப் பயன்பாடுகளையும் கணித அறிவின் வளர்ச்சியையும் அறிய முடிகிறது.
*******************************************************************
27. சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை
‘நவை அறு நன் பொருள் உரைமினோ‘ என
சமயக் கணக்கர் தம் திறம் சார்ந்து
வைதிக மார்க்கத்து அளவை வாதியை
எய்தினள் எய்தி ‘நின் கடைப்பிடி இயம்பு‘ என
‘வேத வியாதனும் கிருதகோடியும்
ஏதம் இல் சைமினி எனும் இவ் ஆசிரியர்
பத்தும் எட்டும் ஆறும் பண்புறத்
தம் தம் வகையால் தாம் பகர்ந்திட்டனர்
*************************************************************
-
வேதங்களை நான்காக பகுத்தவர் வேத வியாசர். உத்தர மீமாஞ்சை எழுதியவர்.
-
போதாயனர் என்னும் கிருதக் கோடி.
-
பூருவ மீமாஞ்சை எழுதிய சைமினி
மேற்குறிப்பிட்டுள்ள மூவரும் அளத்தற்குரிய பொருளை அளந்து காட்டக் கூடிய அளவைகளாக பத்து அளவை, எட்டு அளவை, ஆறு அளவை எனக் கூறியிருக்கின்றனர். அவை வருமாறு:
1.காட்சி அளவை (பிரத்தியட்சம்)
2.கருத்தளவை (அனுமானம்)
3.உவம அளவை (உவமம்)
4.ஆகம அளவை (சத்தம்)
5.அருத்தா அளவை (அருத்தாபத்தி)
6.இயல்பு அளவை (சுபாவம்)
7.ஐதிக அளவை (ஐதிகம்)
8.அபாவ அளவை (இன்மை)
9.மீட்சி அளவை (பாரிசேடம்)
10.உள்ள நெறி அளவை (சம்பவம்).
இவற்றை சுருக்கமாக முதலில் மணிமேகலை இயம்பியதை எழுதிவிட்டு பின்னர் விரிவாக ஒவ்வொன்றாக அலசி ஆய்ந்து பார்க்க உத்தேசித்துள்ளேன்.
-
காட்சி அளவை
************************************************************
மருள் இல் காட்சி ஐ வகை ஆகும்
கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும்
நண்ணிய மூக்கால் நாற்றமும் நாவால்
சுவையும் மெய்யால் ஊறும் எனச் சொன்ன
இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று
துக்கமும் சுகமும் எனத் துயக்கு அற அறிந்து
உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி 27-020
பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றி
சுட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது
88
கிட்டிய தேசம் நாமம் சாதி
குணம் கிரியையின் அறிவது ஆகும்
**********************************************************
மருட்சிக்குச் சிறிதும் இடமில்லாமல் பொருட்களை நேரில் கண்டு அறியும் காட்சி அளவை ஐந்து வகைப்படும். கண்ணால் நிறமும், செவியால் ஓசையும், மூக்கால் மணமும், நாவால் சுவையும், மெய்யால் (உடலால்) ஊறும் அறிதலாகிய ஐந்து வகையாகும். இவற்றைக் கண்டும், கேட்டும், முகர்ந்தும், உண்டும், உற்றும் அறிந்து, ஐம்பொறிகளும் இயங்க வேண்டும். அவ்வாறு இயங்க ஞாயிறு, திங்கள், தீ ஆகியவற்றின் ஒளி துணையாகும்.
பொறிகளின் வாயிலாகக் காட்சி நிகழும்பொழுது காணப்படும் பொருளையும் இடத்தையும் குற்றமின்றி இயைய வைத்து,
சுட்டல் (தோற்றத்தின் உண்மை மாத்திரம் காணுதல்)
திரிதல் (பிறிதொன்றாக்க் காணல்)
ஐயுறுதல் (இன்னதென்று துணியாது மயங்கல்) ஆகிய குற்றங்கள் இன்றி
காணப்படும் பொருள், சார்ந்துள்ள இடம், பெயர், சாதி, குணம், தொழில் ஆகியவற்றால் சிறப்புறக் காண வேண்டும்.
இதுவே காட்சி அளவை.
காட்சியால் தெளிவடைதல் கருத்தை உயர்த்தும்.
-
கருத்தளவை
*************************************************************
கருத்து அளவு ஆவது
குறிக்கொள் அனுமானத்து அனுமேயத்
தகைமை உணரும் தன்மையது ஆகும்
மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம்
பொது எனப்படுவது சாதன சாத்தியம்
இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும் 27-030
கடம் திகழ் யானைக் கான ஒலி கேட்டோன்
உடங்கு “எழில் யானை அங்கு உண்டு” என உணர்தல்
******************************************************************************
கருத்தளவை என்பது குறித்த, அனுமானத்தால் சாதிக்கப்படும் பொருளின் உண்மைத் தன்மையை உணர்த்துவதாகும்.
உதாரணமாக ‘பிளிறுகின்ற ஒலி கேட்டதால் காட்டில் யானை உண்டு’ என்கிறபோது
‘காட்டில் யானை உண்டு எனத் துணியப்படுவது மேற்கோள் (அனுமேயம்) ஆகும்.
‘பிளிறுகின்ற ஒலி கேட்டது’ அம்மேற்கோளைச் சாதிக்கும் ஏது (காரணம்).
‘பிளிறொலி’ அவ்வேதுவுக்கு நிலைக் களம். அதுவே குறி என்றும் சொல்லப்படும்.
ஏதுவைக் கொண்டு சாதிக்கும் திறமே அனுமானம் எனப்படும்.
கருத்தளவை பொது, எச்சம், முதல் – மூன்று வகைப்படும்.
இவையே வடமொழியில் சாமானியதா திருட்டம், சேடம், பூருவம் என்று கூறப்படும்.
இவற்றில் பொதுக் கருத்தளவை என்று கூறப்படுவது, ஏதுவும் மேற்கோளும் ஆகிய இரண்டுக்கும் காரண காரியத் தொடர்பால் ஏற்படும் உடன் நிகழ்ச்சி இல்லாதிருந்த போதிலும் காட்டில் யானையின் பிளிறொலி கேட்டவர் உடனே அங்கு உயர்ந்த யானை ஒன்று இருக்கின்றது என்று உணர்வதே ஆகும். மேலும், பிளிறொலி கேட்டவுடனேயே யானை இருப்பதை உணர்வதோடு அதற்குக் கொம்பு உண்டு, வால் உண்டு, பெரிய உருவம் என்று உணர்வதும் பொதுக் கருத்தளவை ஆகும்.
*******************************************
எச்சம் என்பது வெள்ள ஏதுவினால்
நிச்சயித்து அத் தலை மழை நிகழ்வு உரைத்தல்
முதல் என மொழிவது கருக்கொள் முகில் கண்டு
“இது மழை பெய்யும் என இயம்பிடுதல்
என்னும் ஏதுவின் ஒன்று முக் காலம்
தன்னில் ஒன்றில் சார்ந்து உளதாகி
மண்ட உயிர் முதல் மாசு இன்றாகி
காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல்
*******************************************
எச்சக் கருத்தளவையாவது இங்கு வெள்ளம் வருவதாகிய காரணத்தை (ஏதுவை)க் கொண்டு அங்கே மேலிடத்தில் மழை பெய்திருத்தலை துணிந்து கூறுதலாகும். மழையினது எச்சம் வெள்ளம் ஆதலால் வெள்ளமாகிய ஏதுவைக் கொண்டு சாதிக்கும் கருத்தளவை எச்சக் கருத்தளவை எனப்பட்டது. இதுவே காரியானுமானம் (காரியம் + அனுமானம்) என்றும் கூறப்படும்.
முதல் கருத்தளவை என வழங்குவது நீர்க் கொண்ட கருமுகில் கண்டு இது மழை பெய்யும் என்று துணிந்து கூறுவதாகும். மழை பெய்வதற்கு முகில் காரணமாதலால் இவ் வளவை முதல் கருத்தளவை எனப்பட்டது. இதுவே காரணானுமானம் (காரணம் + அனுமானம்) எனவும் கூறப்படும்.
காட்சி அளவை நிகழ்காலத்திற்கே உரியது. ஆனால் கருத்தளவை முக்காலத்திற்கும் உரியது. காணப்படும் பொருளைக் கொண்டு மாட்சிமைப்பட்ட உயிராகிய முதல் காணப்படாத பிறிதொரு பொருளை குற்றம் ஏதும் இல்லாமல் அறிவது அனுமானம் ஆகும்.